சென்ற 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தப் புகார்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், திடீரென்று இந்த வழக்கில் நேரடியாக உள் நுழைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கிறார்.
இதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அமைச்சரின் பெற்றோர், சகோதரர்கள் போன்றவர்களின் வீடுகள் உட்பட ஆறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சூழ்நிலையில் தான், தற்போது இரண்டாவது முறையாக நேற்று சென்னை, கோவை போன்ற பகுதிகளை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் செங்குந்தபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் இருக்கின்ற தனலட்சுமி மார்பில்ஸ், கிரைனைட் நிறுவனம், அவருடைய வீடு மற்றும் ஆதரவாளர்களின் மீது போன்ற நான்கு பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினரின் துணையுடன் தீவிர சோதனை நடத்தினர்.
ஆகவே கரூரில் அமைச்சரின் உதவியாளர் ஆதரவாளர்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் 2வது நாளாக இன்றும் அமலாக்க துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.