ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்கும் நிலையில், கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டின் தற்போதைய உயிர் பிரச்சனையான மொழி போரையும், தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் திமுக தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த வீடியோவை டேக் செய்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பாலியல் வன்முறைகள், ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்கிறது.
இதில், கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே..? மறைந்த உங்கள் தந்தை நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.