ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் உதவித்தொகை பெற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து (கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும்) புதிய மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணாக்கர்களே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று மற்றும் சாதி சான்று உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணாக்கர்கள் சிரமமின்றி இவ்விணையதளத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக மாணாக்கர்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் மூலம் அக்கல்லூரியின் பற்று அலுவலர் முன்னிலையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்த விவரங்கள் அறிய விண்ணப்பம் பதிவிடும் நடைமுறை குறித்த குறும் படம் மற்றும் மாவட்ட அளவில் உதவி பெற அணுக வேண்டிய அலுவலர்கள் குறித்த விவரம் இக்கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும். ஆகவே மாணவர் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.