தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகராட்சியில் சோபாரி ஜெயஸ்ரீ என்பவர் 13 வது வார்டு பாஜக கவுன்சிலராக இருக்கிறார். இவரது கணவர் வேணுவும் பாஜக நிர்வாகி தான். நேற்று வேணு காரில் பயணம் செய்த போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
மூணுகோடு பகுதியை நோக்கி அந்தப் பணத்தை குண்டூரில் இருந்து அவர் எடுத்துச் சென்றுள்ளார். மூனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில் பாஜக சார்பில் கோமதி ரெட்டி என்ற வேட்பாளர் போட்டியிடுகின்றார். தொகுதி முழுவதும் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வழிகாட்டுதல் குழு தலைவராக இருக்கும் விவேக் வெங்கடசாமி என்பவரின் அறிவுறுத்தலால் வேணு ஒரு கோடியை அந்த பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த பணமானது வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.