இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டு கொடிகள் தான் உயர பறந்து
கொண்டிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ப.சிதம்பரம் மணமக்களை வாழ்த்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்தியா தற்போது மதம், மொழி, இனம், சாதி, வடநாடு, தென்னாடு என பிரிந்து கிடக்கிறது. இத்தகைய சூழலைத்தான் ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எனவே, நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதையும், இதனை ஒற்றுமைப்படுத்த காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் கன்னியாகுமரியில் இருந்து நாடு முழுவதும் நடைபயணம் தொடங்கி உள்ளது.

நாட்டில் 2 கொடிகள் தான் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஒன்று வேலையில்லா திண்டாட்டம், மற்றொன்று பணவீக்கம். இந்த இரண்டையும் சரி செய்ய முடியாமல் ஆட்சியாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த 2 கொடிகளை தான் பிரதமரும், நிதி அமைச்சரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இலங்கையை போல் நிலைமை வராது என்றாலும், பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்தால் இலங்கை போல் நிலைமை பலவீனமடையும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதிகரிக்கவில்லை. அதற்கான புள்ளி விவரமும் இல்லை. ஆனால் குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே போற போக்கில் இது போன்ற விமர்சனங்கள் வருவது எல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது” என்றார்.