சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா போர்வீரர்களின் இருப்பிடமாகவும் உள்ள Xi’an நகரத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் நெரிசலான இடங்களை மூடுவதற்கான அவசர உத்தரவை பிறப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்..
காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் லாக்டவுன் விதிக்கவும், போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும், மால்கள், திரையரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பிற மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அவசரநிலை உத்தரவில், அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பரவல் அதிகரித்த போது, பல மாதங்களாக நீடித்த லாக்டவுன்கள் உட்பட, உலகிலேயே கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் சிலவற்றை சீனா அமல்படுத்தியது. அதன்படி, டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் சியானில் ஒரு நேரத்தில் 13 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வாரக்கணக்கில் முடங்கி இருந்தனர்.. பலர் உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சிரமப்பட்டனர்.. மருத்துவ சேவையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.