திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே சின்ன ராசுக்கும், புல்லட் ராஜாவின் மனைவியான கிருஷ்ணவேணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி சிறையில் இருந்து வெளியே வந்த புல்லட் ராஜாவுக்கு தெரிய வந்ததுள்ளது.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சின்னராசு, தன்னுடைய ஆட்டோவில் கிருஷ்ணவேணியை அழைத்துக் கொண்டு சமயபுரம் சென்றுள்ளார். அதனை பற்றி அறிந்த புல்லட் ராஜா அவர்களையே பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்.
அச்சமயத்தில் சமயபுரம் கோவிலின் உள்ளே முடிகாணிக்கை இடும் மண்டபத்திற்கு அருகே சின்னராசு நடந்து சென்ற போது, புல்லட் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை தாறுமாறாக குத்தினார். இதனால் குத்துப்பட்ட சின்னராசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு புல்லட் ராஜா உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
புகாரின் பேரில் தகவலறிந்த காவல்துறையினர் சமயபுரத்தில் ராஜாவை ஒரு தனியார் விடுதிக்கு அருகாமையில் போலீசார் கைது செய்துள்ளனர். வாக்குமூலத்தில், அவர் அளித்த பதில் “சின்னராசுக்கும் மற்றும் தன் மனைவிக்கும் பழக்கம் இருந்த நிலையில் பலமுறை நான் கண்டித்தும் கள்ளத் தொடர்பை முறிக்காததால் , சின்னராசை திட்டமிட்டு கொலை செய்தேன்” என போலீசாரிடம் தெரிவித்தார்.