திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்ற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், கடந்த ஜூன் 10ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்கததாலும், ஆஜராகாததாலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படுத்தும்படி தென் மாண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டு, சரவணனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எஸ் பி க்கு பதிலாக கூடுதல் எஸ்பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி இருந்ததாகவும், முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எஸ் பி க்கு எதிரான கைது உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.