கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியகோரிக்கையின் போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாற்று கருவறை தாயின் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவர்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல் மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்வதில்லை என்பதனை கருத்தில் கொண்டும், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க ஏதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கி ஆணையிடுகிறது.