மத்தியபிரதேச மாநில பகுதியில் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிஷோர் ஜாதவ் (40). இவர் அப்பகுதியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சீதா (35), காஞ்சன் (15), அன்னு (10), புர்வா (8), அபய் (12) ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் அதிக பண நெருக்கடியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் கடனில் சிக்கி தவித்த நிலையில், வறுமையும் இவர்களை வாட்ட துவங்கியது. வறுமையால் இனியும் உயிர் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனை தொடர்ந்து குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்ள கிஷோர் முடிவு செய்தார். அதன்படி பாலில் விஷல் கலந்து அவரும், சீதாவும் குடித்தது மட்டுமல்லாமல் அவர்களின் நான்கு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் ஆறு பேரும் சுயநினைவை இழந்து கீழே சரிந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மகன் புர்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
மேலும் மற்ற 3 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிஷோர் மற்றும் சீதா ஆகிய இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.