ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
குடும்ப வறுமையால் கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கவுதமியின் தங்கையான பிரியா தனது கணவர் சஞ்சீவிராயனுடன் (35) வசித்து வருகிறார்.
சஞ்சீவிராயன் தனது விருப்பத்திற்கு இணங்க கவுதமி வீட்டிற்கு அடிக்கடி சென்று வன்முறையில் ஈடுபட்டதால் பொறுமை இழந்த கௌதமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சஞ்சீவிராயனை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால், ஆத்திரத்தில் இருந்த தங்கையின் கணவர் சஞ்சீவிராயன் கவுதமி வழக்கம் போல் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவுதமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சீவிராயன் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சஞ்சீவிராயனை தேடி வருகின்றனர்.