பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்போதும் துருதுருவென்று இருப்பார்கள். அது ஒருபுறம் நமக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களுடைய அந்த துருதுரு குறும்புத்தனமே அவர்களை பல்வேறு இன்னல்களில், சிக்க வைத்து விடும் என்பதில் பெற்றோர்களும், விவரம் அறிந்தவர்களும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
ஆகவே உங்களுடைய குழந்தைகளை சுதந்திரமாக விட்டாலும், எப்போதும் உங்களுடைய கண் பார்வையிலேயே வைத்துக் கொள்வது நல்லது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சானிடோரியம் பகுதியில் 11 வயது சிறுவன், தேங்கி நின்ற தண்ணீரின் அருகே மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக சென்று கால் இடறி சேற்றில் விழுந்து, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சானிட்டோரியம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற 11 வயது சிறுவன், தன்னுடைய சகா நண்பர்களோடு ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம், அந்த பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளை சானிட்டோரியம் பகுதியில் சிலர் செய்திருந்தனர். அங்கு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு எருக்கம் பூ பறிப்பதற்காக அருகில் உள்ள ஒரு பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அருகே இருந்த ஒரு குட்டையில் மழை நீர் தேங்கி நின்றதாக தெரிகிறது. ஆகவே அந்த குட்டையில் மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக அந்த குட்டையின் அருகே, சென்று அந்த சிறுவன் விஷ்வா எட்டி பார்த்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அவர் கால் இடறி, அந்த குட்டையில் விழுந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த விஷ்வா, அந்த குட்டையில் இருந்து எழுந்து வருவதற்கு, எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும், அந்த குட்டையில் சேறும், சகதியுமாக இருந்ததால், அவ்வளவு எளிதில் அவரால், அந்த குட்டையில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்வாவின் சக நண்பர்கள் கூச்சலிட தொடங்கினர்.
திடீரென்று சிறுவர்கள் கூச்சிலிடுவதை பார்த்த அந்த பகுதி மக்கள், அங்கு வந்து பார்த்தபோது, சிறுவன் விஸ்வா சேற்றில் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக, இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் நிலை கண்டு, பதறிப்போய் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆகவே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, சிறுவன் விஷ்வாவை, அந்த சேற்றில் இருந்து, மீட்க முயற்சி செய்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சிறுவன் விஷ்வாவை, அந்த சேற்றில் இருந்து பிணமாக, தீயணைப்பு படை வீரர்கள் மீட்டெடுத்தனர்.
இதன்பிறகு, சிறுவன் விஸ்வாவின் உடல், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.