அபுதாபியில் நடைபெற்ற “Make It in the Emirates” மாநாட்டில் ஈமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகமது அலாபார் கூறிய கருத்துகள் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்திய ஊழியர்கள் குறித்து அவர் தெரிவித்த பாராட்டு தொழில்துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முகமது அலாபார் பேசும்போது, இந்தியர்கள் தங்களின் வலுவான பணி நெறி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக தனது நிறுவனத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்ர். எந்த நேரத்திலும் வேலை தொடர்பான பொறுப்புகளை ஏற்க தயாராக இருப்பது, அவர்களின் தனித்துவமான பலமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தனது வெற்றிக்கான அடிப்படை காரணம் அறிவுக்கூர்மை அல்ல, கடின உழைப்பே என தெளிவாக கூறினார். “என் அறிவு சராசரி மட்டுமே, ஆனால் என் கடின உழைப்பே என்னை முன்னேற்றியது” என்று அவர் தெரிவித்தார். மேலும், கடின உழைப்பு, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துதல், மற்றும் சிறிய விவரங்களிலும் கவனம் செலுத்துதல் ஆகியவை வெற்றியின் முக்கிய அம்சங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் “நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டி, முயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் திறமை இல்லாவிட்டாலும் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை உருவாக்கிய துபாய் மைய நிறுவனமான ஈமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள அலாபார், நிறுவன வளர்ச்சிக்கு மனிதவள மேலாண்மை மிக முக்கியம் எனவும் தெரிவித்தார். தனது நிறுவனத்தில் இந்திய ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதாகவும், அவர்களின் நேர்த்தியான பணி நெறி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2008 உலக நிதி நெருக்கடி மற்றும் COVID-19 பெருந்தொற்று போன்ற உலகளாவிய சவால்களை சுட்டிக்காட்டிய அவர், நிறுவனங்கள் எதிர்வினை அடிப்படையில் செயல்படாமல், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நெருக்கடிகளுக்கு தயாராக இருக்கும் நிறுவனங்களே நீண்ட கால வெற்றியை அடையும் என்றார்.. இந்திய ஊழியர்களின் பணி நெறி குறித்த அவரது பாராட்டு, பலராலும் நேர்மறையாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
Read more: விஜய்க்கு எதிராக திமுக – அதிமுக கூட்டணி..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்..!



