குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவுதான் கவனமாக பார்த்து வளர்த்தாலும், ஒரு சில நொடிகள் ஏற்படும் கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரணமாக, கேரள மாநிலத்தில் நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கேரளம் மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள குன்னம்புரத்தில் வசித்து வருபவர் முனீர். இவருக்கு 3 வயதான முகமது ரிசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை உணவை சாப்பிட்ட குழந்தை, சிறிது நேரத்திலேயே மிக்சர் சாப்பிட்டுள்ளான். அப்போது, குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் குழந்தையின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், குழந்தையின் பெற்றோர் கதறி துடிக்கும் காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது. இதையடுத்து , உடல் உடற்கூறாய்வுக்காக அக்குழந்தையின் உடல் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லப்பட்டது.
உடல் உடற்கூறாய்வு அறிக்கையின் படி, அக்குழந்தையின் தொண்டையில் மிக்சரில் இருந்த வேர்க்கடலை சிக்கி இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. எப்பொழுதும் சந்தோசமாக ஓடி ஆடி விளையாடிய குழந்தை, மிக்சர் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: 50 வயசானாலும் 25 வயசு மாதிரி ஃபிட்டா இருக்கணுமா? இதை கண்டிப்பா படிங்க!



