பெண்கள் என்றாலே பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலை உலகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வருகிறது என்று சொல்லலாம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பெண்களின் முன்னேற்றத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட சிலரும் சமூகத்தில் உள்ளனர். பெண்கள் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேற முயற்சித்தாலே, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, அவர்களின் குணநலனை இழிவுபடுத்துவது, அவதூறு பரப்புவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை அடக்க நினைக்கின்றனர். அந்த வகையில், தற்போது தெலுங்கானா தலைநகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் ரித்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். தற்போது அவர் தன்னுடன் பயின்று வரும் சக ஆண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் குறித்து அளித்த புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகாரில், ஆண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தது மட்டும் இல்லாமல் தனது அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்து அதை தனது கணவருக்கு அனுப்பியதாகப் ரிதிக்கா புகார் அளித்துள்ளார்.
ஜூலை 18ஆம் தேதி, ரித்திகா இந்த புகாரை அளித்த நிலையில், போலீசார் ஆண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரித்திகா அளித்த புகாரில், “கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் அந்த நபர் தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும், பல ஆபாச மெசேஜ்களை வாட்ஸ்அப் மூலம் அவர் தனக்கு அனுப்பியதாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், மற்றொரு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியுடன் தனக்கு பழக்கம் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி, அதை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரித்திகாவின் செல்போனை வலுக்கட்டாயமாக கைப்பற்றி, அதில் உள்ள தனிப்பட்ட சாட்களை காட்டுமாறும், பாஸ்வோர்டை சொல்லும்படியும் மிரட்டியுள்ளார். மேலும், ரித்திக்காவை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று, தலைமுடியைப் பிடித்து இழுத்ததுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். ரித்திகா அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்த போது, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அறையை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்துள்ளார்.
மேலும், ஆணுறைகள் அடங்கிய பாக்கெட்டுகளை அவர் மீது எரிந்து தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். அது மட்டும் இல்லாமல், ரித்திக்காவை அனுமதியின்றி வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது கணவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். சம்பவம் தொடர்பான ஆதாரங்கள், டிஜிட்டல் ஆதாரம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read: சும்மா அழகுக்காக இல்லை… திருமணமான பெண்கள் வகிட்டில் குங்குமம் வைப்பதற்கு இது தான் காரணம்!



