அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் பாத்ஷாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தினேஷ் மற்றும் தல்மா தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது மனைவி மயக்க நிலையில் இருப்பதாக தினேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தல்மாவை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், தானும் தனது மனைவியும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவதாகவும், சம்பவத்தன்று தல்மா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயக்கமடைந்ததாகவும் தினேஷ் போலீசாரிடம் கூறியிருந்தார்.
எனினும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பிரேதப் பரிசோதனை அறிக்கையை போலீசார் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் வெளியான அறிக்கையில், தல்மா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து தினேஷை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்தின் உண்மையை கண்டறிந்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்தபோது இரவு உணவு தயாரிப்பது தொடர்பாக மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தினேஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: “தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆணுறையை வீசி…” பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்த கொடூரம்!



