கோடைக்கால இரவுகளில் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக பலருக்கும் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக ஏசி வசதி இல்லாத வீடுகளில், இரவு நேரத்தில் அறை முழுவதும் வெப்பம் அடைத்திருப்பதால் தூங்குவதற்கே சிரமமாகிறது. ஆனால், சில எளிய மாற்றங்களைச் செய்தாலே கோடை இரவுகளிலும் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் உறங்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலானோர் கோடைக்காலத்தில் மின்விசிறியை நேராக தங்களை நோக்கி வைத்து தூங்குவார்கள். ஆனால், அது அறையில் உள்ள சூடான காற்றையே சுற்றவிடும். அதற்கு பதிலாக, மேசை மின்விசிறி அல்லது தரை விசிறியை ஜன்னலை நோக்கி திருப்பி வைத்தால், அறையில் இருக்கும் சூடான காற்று வெளியேறி, அறை விரைவாக குளிர்ச்சியாகும். இந்தச் சிறிய மாற்றமே இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைத் தர உதவும்.
மேலும், படுக்கை விரிப்பு அல்லது தலையணை உறையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு ஃபிரீசரில் வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். இதனால் சில மணிநேரங்களுக்கு இயற்கையான குளிர்ச்சியை உணர முடியும். பலர் இதை கோடை இரவுகளுக்கான “இயற்கை ஏசி ட்ரிக்” எனவும் அழைக்கின்றனர்.
அதேபோல், ஒரு பெரிய பருத்தித் துணியை தண்ணீரில் நனைத்து நன்றாகப் பிழிந்து, உடலின் மீது போர்த்திக்கொண்டு தூங்கும் முறையும் தற்போது வைரலாக பேசப்படுகிறது. “எகிப்திய முறை” என அழைக்கப்படும் இந்த யுக்தி, உடலின் வெப்பத்தை குறைத்து ஏசி போன்ற குளிர்ச்சியான உணர்வைத் தரும் என கூறப்படுகிறது.
உறங்கச் செல்லும் முன் மணிக்கட்டு, கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களில் குளிர்ந்த நீர் அல்லது ஈரத் துணியை சில நிமிடங்கள் வைத்தாலும் உடல் வெப்பநிலை வேகமாகக் குறையும். இந்தப் பகுதிகளில் இரத்த நாளங்கள் சருமத்திற்கு அருகில் இருப்பதால், உடனடி குளிர்ச்சி கிடைக்க உதவுகிறது.
கோடைக்காலத்தில் காலுறைகள் அணிவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், மெல்லிய பருத்திக் காலுறையை குளிர்ந்த நீரில் நனைத்து அணிவதால் பாதங்கள் குளிர்ச்சியாகி, மூளைக்கு தூக்க சமிக்ஞை விரைவாகச் செல்லும் என தூக்க நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய மாற்றங்கள் மற்றும் இயற்கை முறைகள் மூலமே, ஏசி இல்லாமல்கூட கோடைக்கால இரவுகளில் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும் என்பது தற்போது சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Read more: வேகமாக பரவும் எபோலா வைரஸ்.. இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.. மத்திய அரசு அலர்ட்..!



