கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தரமணி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் ஈழம், காஷ்மீர் பிரச்சனை, நீயூட்ரினோ மற்றும் சேலம் எட்டு வழிச் சாலை திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அந்த பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது எனக் கூறி, துணை காவல் ஆய்வாளர் புகார் அளித்ததை அடுத்து, தரமணி காவல் நிலைய போலீசார் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில், என் பேச்சில் கலவரத்தை தூண்டும் நோக்கம் இல்லை என்றும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் எதுவும் பேசவில்லை. அரசியல் நோக்கத்துடன் போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார். தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more: நேற்று கலங்க வைத்த மாணவிக்கு இன்று கலைஞர் கனவு இல்லம்! ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!



