நாட்டின் உள்நாட்டு சர்க்கரை விநியோகத்தை சீராக வைத்திருக்க மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை 2026 செப்டம்பர் 30 வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலைகள் உயர்ந்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் சர்க்கரை கிடைப்பை அதிகரித்து விலையை கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சில குறிப்பிட்ட விதிவிலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. CXL மற்றும் TRQ ஒதுக்கீடுகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதிகள், முன் அங்கீகார திட்டம் (AAS) மூலம் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகள், மற்றும் அரசுகளுக்கு இடையேயான உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே ஏற்றுமதி செயல்முறையில் உள்ள சரக்குகளுக்கும் இந்த கட்டுப்பாடு இல்லை. உலகளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடாக உள்ளது. உள்நாட்டு தேவையை விட அதிக உற்பத்தி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், முன்னதாக 1.5 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் முக்கிய கரும்பு உற்பத்தி பகுதிகளில் விளைச்சல் குறைந்ததால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உற்பத்தி உள்நாட்டு தேவையை விட குறைவாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்றுமதி தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



