பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. இந்த ஆப்களை கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவ்வப்போது புதுபுது அப்டேங்களுக்கு அவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், குறிப்பாக ஆண்டு வருவாய் ரூ.40 லட்சம் மேற்பட்ட நிறுவனங்களை முதற்கட்டமாக இந்த திட்டத்தில் கொண்டுவரலாம் என வங்கிகள் பரிந்துரைத்துள்ளன. இதன் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் அன்றாட பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக வணிகர்களிடமிருந்து வங்கிகள் MDR (Merchant Discount Rate) என்ற கட்டணத்தை ஏற்கனவே வசூலித்து வந்தன. ஆனால் RuPay டெபிட் கார்டுகள் மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கு 2020-இல் இருந்து மத்திய அரசு கட்டண விலக்கை வழங்கியது. இதன் காரணமாக வங்கிகளும், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டண சேவையளிப்பவர்களும் வருவாயில் நட்டம் அடைந்தனர்.
2023-இல் மட்டும் இந்தியாவில் UPI மூலம் ரூ.20,787 கோடியுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது 2018-இல் இருந்த ரூ.5.86 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், வளர்ச்சி மிக அதிகம் என்பதும் தெரிய வருகிறது. இன்று இந்தியாவில் சுமார் 60 லட்சம் வணிகர்கள் UPIயை பயன்படுத்தி பணம் பெறுகிறார்கள். இதில் 90% சிறு அளவிலான வணிகர்களாக உள்ளனர்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக வருவாயுள்ள வணிகர்களிடமிருந்து மட்டும் MDR கட்டணங்களை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது மூலம் வங்கிகள் மற்றும் பிலாடெக் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு ஏற்படும், அதேசமயம் சிறு வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: Gold Rate: ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இப்படியே போனால் என்னதான் ஆகும்.!!