சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆறு முறை இதயத்துடிப்பு நின்ற ஆசிரியருக்கு தீவிரமான சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்திருக்கின்றனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். இது மருத்துவத் துறையில் ஒரு அரிதான மற்றும் சாதனையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவருக்கு கடந்த 28ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்படவே சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இதய சிகிச்சை நிபுணர்களின் தீவிரமான சிகிச்சையின் மூலம் இவருக்கு தற்போது இதயத்துடிப்பு சீராகி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு சரி செய்யப்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்தால் இதயத்துடிப்பு சீராகும் என அந்த சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அவருக்கு இதயத்துடிப்பு சீராகாமல் நின்றது. இதனைத் தொடர்ந்து சி பி ஆர் மற்றும் எலக்ட்ரிக் ஷாக்குகள் கொடுக்கப்பட்டு இதயத்துடிப்பு மீட்கப்பட்டது. பின்னர் இதயத்துடிப்பை சீராக வைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன. செயற்கை சுவாசமும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர் படிப்படியாக குணமடைந்து நடக்கவும் சாப்பிடவும் ஆரம்பித்தார். இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தோணி ராஜன் தெரிவிக்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மனிதனுக்கு இதயத்துடிப்பு நின்று விட்டால் இறப்பு நேரிடும். ஆனால் இவருக்கு ஒரு மணி நேரத்தில் ஐந்து முறை இதயத்துடிப்பு நின்றிருக்கிறது. மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சையால் தற்போது நலமுடன் இருக்கிறார். இது மருத்துவ உலகில் அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு என்று கூறியிருக்கிறார்.