சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகார் கடந்த 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் அந்த சிறுமி ஆந்திர மாநிலம் தடாவில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த சிறுமியையும் அந்த சிறுமியுடன் இருந்த வாலிபர் ஒருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன் பிறகு அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஆந்திர மாநிலம் தடாவிற்கு அழைத்துச் சென்று அறை எடுத்து அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தார்.
ஆகவே வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (22) என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர் அதன் பிறகு புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.