2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து செய்துயாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி ஆட்சி என்பது வரவேற்கத்தக்கது. இது தே.மு.தி.க.வின் அடிப்படை நிலைப்பாடாகவே இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா சாலையில் நடைபெற்ற சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைப் பற்றிய நூல் வெளியீட்டு விழா பல அரசியல் தலைவர்களின் பங்கேற்பால் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. நிகழ்வில் தி.மு.க. மூத்த தலைவர் டி.ஆர். பாலு, எம்.பி. அப்பாவு மற்றும் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டில் எல்.கே. சுதீஷ் பங்கேற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் நூல் வெளியீட்டு விழாவில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். அதற்கும் கூட்டணிக்கோ கட்சிக்கோ எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.