மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, மத்திய அரசு அறிவித்து பல மாதங்கள் கழித்து அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு முன்தேதியிட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த படி, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அறிவித்ததும் ஒரு சில நாட்களிலேயே மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவித்து, வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவில் ; தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தியது. இந்த ஆணையை பின்பற்றி தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகையை பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



