விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் 4 கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்விபத்து, பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில் மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.
Read more: அட்சய திரிதியை இரவில் அரிய யோகம்..! இந்த ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட்.. பணம் கொட்டும்..!



