தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக பேசிய மீன் வியாபாரியை வெட்டிக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர் நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் மீன் வெட்டும் வேலை செய்பவர் சிரஞ்சீவி (24). இந்நிலையில், சிரஞ்சீவின் வீட்டிற்கு சென்ற பாண்டியன், அவரது மனைவி பவானியை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி மிரட்டிவிட்டு வந்துள்ளார். இதனைக் கேள்விபட்ட சிரஞ்சீவி தனது நண்பரான ஹரி என்பவரோடு, குடிபோதையில் சென்று பாண்டியன் வீட்டின் அருகே பொழிச்சலூர், விநாயகா நகரில் சாலையில் வைத்து பாண்டியனை கத்தியால் இடது விலா மற்றும் தலையில் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கர் நகர் போலீசார், பாண்டியனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியதால் பாண்டியனை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.