செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர்.
இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும்பொது ரோவர் கருவியில் இப்படம் பதிவாகியுள்ளது. படத்தில் காணப்படும் செவ்வக வடிவ திறப்பு, இயற்கையான பாறை அமைப்பை விட மனிதர்களால் உருவாக்கப்பட்ட கதவைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதனால், சிலர் இது வேற்றுகிரகவாசிகளின் வாழ்விடத்துக்கான நுழைவாயிலாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஆனால் விஞ்ஞானிகள் இந்த கருத்தை ஏற்கவில்லை. அவர்களது விளக்கப்படி, செவ்வாயின் மேற்பரப்பில் வெப்பநிலை மாற்றங்கள், காற்று அரிப்பு மற்றும் பாறைச் சிதைவு போன்ற இயற்கை காரணங்களால் இதுபோன்ற விரிசல்கள் உருவாகலாம். இது புவியியல் மாற்றங்களின் விளைவாக உருவானதாகவே கருதப்படுகிறது. மேலும், புகைப்படத்தில் அது பெரிய கதவு போல தோன்றினாலும், உண்மையில் அது சில சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு பாறை விரிசல் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா கோணம் மற்றும் நிழல் காரணமாக அந்த அமைப்பு வேறுபட்ட தோற்றத்தை வழங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
செவ்வாயில் இதற்கு முன்பும் மனித முகம், சிலை, விலங்கு உருவம் போன்ற பல விசித்திரமான வடிவங்கள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. பின்னர் அவை அனைத்தும் இயற்கையாக உருவான பாறை அமைப்புகளாகவே விளக்கப்பட்டன. செவ்வாயில் உயிரினங்கள் இருந்ததா அல்லது தற்போது உள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இருப்பினும், இதுவரை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான நேரடி ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று நாசா தெரிவிக்கிறது. எனவே, செவ்வாயில் காணப்பட்ட இந்த கதவு போன்ற அமைப்பு ஆர்வத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தினாலும், அறிவியல் ரீதியாக அது இயற்கையாக உருவான பாறை அமைப்பாகவே பார்க்கப்படுகிறது.
Also Read:விஜய்யை தொடர்ந்து யாஷ் படத்திற்கும் அதே சிக்கல்..! ‘டாக்ஸிக்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!



