மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகம் அடைந்து அது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார் அந்த இளம்பெண். மறு நாள் தன் மனைவியை சமானப்படுத்தி அழைத்து வர வேண்டும் என்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த வாலிபர். எவ்வளவு சொல்லி பேசியும் மனைவி வர மறுத்திருக்கிறார். இதனால் அந்த வாலிபர் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
அதற்கு முன்பாக தனது இரண்டு மகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி, விஷம் கலந்த உணவை 6 வயது சிறுமிக்கு ஊட்டி இருக்கிறார். அந்த உணவை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்துள்ளார். அடுத்து இளைய மகளுக்கும் சாப்பாடு ஊட்டி இருக்கிறார் . ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட உறவினர்கள், இளைய மகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் திடீரென்று விஷம் கலந்த உணவை அந்த வாலிபர் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் தந்தையும் மகளும் மயங்கி கிடந்திருக்கிறார்கள். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.