போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 1000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 10,000 ரூபாயும், பைக் ரேஸில் ஈடுபடுவோருக்கு 5,000 ரூபாயும் அபராதமாகப் போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்து வருகின்றனர்.
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி, சென்னையில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15.5 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.