தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட நடவடிக்கையின்படி 2025 ஆகஸ்ட் 9 அன்று தேர்தல் ஆணையம் 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது..
இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டத்தில் 2025 செப்டம்பர் 18 அன்று மேலும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கட்சிகள் அடங்கும். தேர்தலில் போட்டியிட்டாலும் வருடாந்தர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கடந்த 3 ஆண்டுகளாக (2021-22,2022-23,2023-24) உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்காத மற்றும் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாத 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 கட்சிகள் அடங்கும். இந்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரப்பட்டுள்ளார். அவரது அறிக்கை அடிப்படையில் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



