வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் எப்போதும் தங்களுடைய குழந்தைகளிடம் நண்பர்களாகவும் பழக வேண்டும், அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளிலும் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
அதோடு பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் அதேபோல பெற்றோர்கள் இடையே ஏற்படும் சிறு,சிறு தகராறு கூட குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னை குன்றத்துரை அடுத்துள்ள மணிகண்டன் நகரின் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (19) குன்றத்தூர் அடுத்துள்ள கோவூரில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் பி காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். சென்ற சில நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து நேற்றும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது பிரபாகரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்யப் போவதாக மிரட்டி உள்ளார். இதனை கண்ட அவருடைய மகன் கத்தியை பிடுங்கி உங்களுடைய தொடர் சண்டையால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்து, உடனே தன்னுடைய மார்பில் வேகமாக குத்திக் கொண்டார். அதன் பிறகு அங்கேயே இரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே சரிந்தார்.
இதை பார்த்து பதற்றமான பாலகிருஷ்ணனின் பெற்றோர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இது தொடர்பாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் உடலை வைத்து பெய்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.