தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.
கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அன்று முதல் 3 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய இடைவிடாது மழை பெய்ததால், பொதுமக்கள் பலரும் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலியில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளார்.



