பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபாச படங்கள் வேகமாக பரவியது. இந்த படங்களை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தான் அந்த பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆபாச படங்கள் வெளியானது தெரியவந்தது.
இளம் பெண் அளித்த புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆபாச படங்களை பகிர்ந்தது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த விமல் (வயது 31) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் அளித்த தகவலின்படி விமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது திண்டுக்கல்லில் நண்பருடன் தங்கி உள்ளார்.
தனது தண்பரிடம் தனக்கு சிம் கார்டு ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவரது நண்பர் தனது பெயரில் சிம்கார்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து விமல் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி இன்ஸ்டாகிராமில் பல்வேறு படங்களை பகிர்ந்தார்.
போலி கணக்கு விவரம் தகவல் வெளிவந்தவுடன் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விமலை கைது செய்ததும் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் பல பெண்களின் புகைப்படங்களை தவறாக மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டது தெரியவந்தது., சிம் கார்டு வாங்கி கொடுத்த நண்பரின் மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட விமலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இருவீட்டார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..