பெற்றோர் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் குழந்தைகளின் உணர்வுகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. அதன் விளைவாக, பல குழந்தைகள் தனிமை, பாச ஏக்கம் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகிறது. அப்படிப்பட்ட காரணங்களால் திருப்பூரில் 11 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த நந்திதா என்ற மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது பெற்றோர் தனித்தனியாக வேறு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நந்திதாவையும் அவரது தம்பியையும் 70 வயதான பாட்டி பொன்னம்மாள் பராமரித்து வளர்த்து வந்தார். பெற்றோர் தங்களை வந்து பார்க்காத ஏக்கம் மற்றும் வயதான பாட்டி மிகவும் கஷ்டப்பட்டு தங்களை வளர்த்து வருவதை நினைத்து நந்திதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நந்திதா, அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பாட்டி, சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளின் மனநிலையை கவனிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: பெரிய முதலீடு தேவையில்லை… பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில்!



