தூத்துக்குடியை அடுத்துள்ள சங்கரபேரி பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரவுடி கருப்பசாமி. இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி கருப்பசாமியை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து சுற்றி வளைத்து சராமாறியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவுடி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 2017 ஆம் ஆண்டு அங்குசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் பழிக்கு பலியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
தப்பியோடிய 10 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.