கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.. இந்த நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதாவது 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானதால், வெப்பமான மாதமாக பிப்ரவரி மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதே வேளையில் தெற்கு தீபகற்பம் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகள் கடுமையான வெப்ப வானிலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இதனிடையே இந்திய வானிலை மைய விஞ்ஞானி எஸ்.சி பான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மார்ச் மாதத்தில் வெப்ப அலைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது.. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீவிர வானிலை பதிவாகலாம். பிப்ரவரி மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலை 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமாக இருந்தது.. ஒட்டுமொத்த கிரகமும், புவி வெப்பமடைதலின் சகாப்தத்தில் வாழ்கிறது. நாம் வெப்பமயமாதல் உலகில் வாழ்கிறோம்,” என்று தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு-மத்திய இந்தியாவிலும் மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட குறைவான மழை பெய்யும்.. தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு-மத்திய இந்தியாவிலும் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும். இந்தியாவில் மார்ச் முதல் மே வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்..” என்று தெரிவித்தார்..