முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.. இதனிடையே தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார். தவெகவின் அழைப்பை ஏற்ற ஐயூஎம்எல் மற்றும் விசிக அமைச்சரவையில் பங்கு பெற்றது. இந்த நிலையில் விசிகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் எடுத்து வரும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சமீப கால அரசியல் நிலைப்பாடுகள் வேதனை அளிப்பதாகவும், கொள்கையில் உறுதி இல்லாமல் குழப்பமான அணுகுமுறை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கட்சிக்குள் தெளிவற்ற நிலை உருவாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மக்கள் சித்தாந்தங்களை விட கவர்ச்சி அரசியலின் பின்னால் செல்லும் போக்கு ஆபத்தானது எனவும், இதை டாக்டர் அம்பேத்கர் ஏற்கனவே எச்சரித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



