மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 19 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 4,500-ற்கும் மேற்பட்ட குரூப்-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெவளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 04.01.2023 ஆகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 32 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ.100/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 19.12.2022 அன்று காலை 11 மணியளவில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இது தொடர்பான விவரங்களுக்கு 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.