மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசாங்கம், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படுகிறது. அது போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை இந்த வாரம் வழங்கப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வாய்ப்பு உள்ளது. அந்தத் திட்டங்களை குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளனர். சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது.
புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 15-ம் தேதி பணம் வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டம் & தமிழ் புதல்வன் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு உதவி பெரும் தமிழ் வழிப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தடையற்ற நிதியுதவி வழங்கும் வகையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு அடுத்த தவணை உதவி தொகை இந்த வாரம் வங்கி கணக்கு செலுத்தப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.