மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் நிலவிய பதற்றம் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் சூழலால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உருவானது. இதனால் உள்நாட்டு எல்பிஜி விநியோகத்தை சீராக்கும் நோக்கில், மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அப்போது நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் முன்பதிவு இடைவெளியாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த குறிப்பிட்ட நாட்கள் முடியும் வரை அடுத்த கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது. தற்போது சமையல் எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி சீரடைந்துள்ளதாலும், சிலிண்டர் முன்பதிவு நிலுவைகள் பெருமளவில் குறைந்துள்ளதாலும் இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகரம் என்ற பாகுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கும் இந்த 25 நாள் முன்பதிவு நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


