இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி விழா, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தடைகளை தகர்த்து புதிய காரியங்களை வெற்றியாக்கும் கடவுளாகப் போற்றப்படும் விநாயகருக்கு நடத்தப்படும் இந்த விழா, இந்தியா முழுவதும் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் ‘விநாயகர் உத்சவத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்து பஞ்சாங்கத்தின்படி, ஆவணி/புரட்டாசி மாதத்தில் வரும் ‘பத்ரபத’ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் (வளர்பிறை நான்காம் நாள்) இந்த நன்னாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சதுர்த்தி திதியானது செப்டம்பர் 14 காலை சுமார் 7:06 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 15 காலை சுமார் 7:44 மணி வரை நீடிக்கிறது. விநாயகப் பெருமான் நண்பகல் வேளையில்தான் அவதரித்தார் என்று புராணங்கள் குறிப்பிடுவதால், சதுர்த்தி திதி நண்பகலில் அமைந்திருக்கும் செப்டம்பர் 14 அன்றே சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான நகரங்களில் நண்பகல் பூஜைக்கான சுப முகூர்த்த நேரம் காலை 11:02 மணி முதல் மதியம் 1:31 மணி வரை அமைகிறது.
இந்த விழாவை முன்னிட்டு வீடுகளையும் பூஜை அறைகளையும் தூய்மைப்படுத்தி, மலர்கள், மாவிலை தோரணங்களால் அலங்கரித்து விநாயகர் சிலையை எழுந்தருளச் செய்கின்றனர். தொடர்ந்து ‘பிராண பிரதிஷ்டை’ சடங்கு நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க அருகம்புல், எருக்கம் பூ மாலை, சுண்டல், பழங்கள் மற்றும் விநாயகருக்கு மிகவும் உகந்த ‘கொழுக்கட்டை’ நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. வீடுகளில் நடைபெறும் வழிபாடுகள் ஒருபுறமிருக்க, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிரம்மாண்ட பொதுப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இசை, ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர்.
படைப்பு மற்றும் இயற்கை சுழற்சியின் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது. முழுமையாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த கணபதி திருவிழாவின் முக்கிய ஊர்வலம் மற்றும் நீர்நிலை விசர்ஜன் நாளான ‘அனந்த சதுர்தசி’ வரும் செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
Read More : குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கு இனி 45 நாட்கள் காத்திருக்க தேவையில்லை..! மத்திய அரசு தளர்வு அறிவிப்பு..!



