கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னையில் `வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் தலைப்பில் தமிழகத்தின் சாதனை பெண்களின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 பேருக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர்; கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை, 1 கோடியே 13 லட்சத்து 75,492 பேருக்கு வழங்கியிருக்கிறோம். இந்த எண்ணிக்கையை அதிகரித்து, 16 லட்சத்து 94,339 பேருக்கு ரூ.1,000 போட்டுவிட்டோம். இனி 1 கோடியே 30 லட்சத்து 69,831 பேருக்கு மாதம் தொடர்ந்து ரூ.1,000 கிடைக்கும். தலைநிமிரும் தமிழகத்தில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும். இந்த தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் கல்விக்கு பயன்பட வேண்டும். தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் அவசியம் என்றார்.



