விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி திட்டத்தை வகுத்துள்ளதாகவும், தற்போது விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், ஆட்டோரிக்ஷா, டாக்சி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 3 லட்சம் வரை விவசாயிகளுக்கு பூஜ்ஜிய விழுக்காடு கடன் வழங்கினாலும், இயற்கையின் சீற்றத்தால் விவசாயிகள் இன்னும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இருப்பினும், இம்முறை, மாநிலத்தில் நல்ல மழை பெய்து, அனைத்து குளங்களும், நீர்நிலைகளும் நிரம்பியிருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் அவர் கூறினார். மேல் பத்ரா திட்டம் குறித்து, தேசிய திட்டமாக அறிவிக்கப்படும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்றார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன், கர்நாடகாவுக்கு ரூ.14,000 கோடி மானியம் வரும், விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் போதும் என்றார்.