குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்திலேயே கொடூரங்கள் அரங்கேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோபமும், குடும்பப் பிரச்சினைகளும் சிலரின் மனிதநேயத்தையே மறக்கச் செய்கின்றன. எந்த தவறும் செய்யாத பச்சிளம் குழந்தைகள் கூட இதுபோன்ற கொடூரங்களுக்கு பலியாகும் சம்பவங்கள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாயி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் பூஜிதா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் அனந்தபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததிலிருந்தே அந்த குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காதல் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படும் அசோக்குமாரின் தாயார் சத்தெம்மா, குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது திடீரென குழந்தையை தூக்கிச் சென்று, மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீசியதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, கீழே கிடந்த காலி தண்ணீர் பாட்டில்கள் மீது குழந்தை விழுந்ததால் உயிர் தப்பியது. குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சத்தெம்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



