சந்தேகம் ஒரு உறவை மெதுவாக அழித்து விடும். நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பும் நீடிக்காது. சிறிய சந்தேகம் கூட சில நேரங்களில் பெரிய பிரச்சினையாக மாறி, குடும்பங்களையே சீரழித்து விடுகிறது. பல உயிர்களை பறித்திருக்கும் இந்த சந்தேகம், மேலும் ஒரு பெண்ணின் உயிரையும் பறித்துள்ளது. காஞ்சிபுரத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பழையசீவரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) ஊர்க்காவலராக பணியாற்றி வந்தார். ஆனம்பாக்கத்தைச் சேர்ந்த சோனியா (28) என்பவரை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது சோனியா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சோனியா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கு சென்ற சோமசுந்தரம், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி, சோனியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவல் கிடைத்ததும் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சோனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதே பகுதியில் பதுங்கியிருந்த சோமசுந்தரத்தை கைது செய்தனர். விசாரணையின்போது, தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மருத்துவப் பிரச்சினை இருப்பதாகவும், அதனால் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Also Read: 2 மாத குழந்தையை, 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பாட்டி!! அதிர்ச்சியூட்டும் காரணம்!



