தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 23), தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும்.
இதனைத் தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 24) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. அதேநேரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் இதர மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எக்காரணம் கொண்டும் இப்பகுதிகளுக்குக் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



