தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11-ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், 12-ம் தேதி வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். நேற்று அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, பிரையர் எஸ்டேட் ஆகிய இடங்களில் 2 செ.மீ., பில்லிமலை எஸ்டேட், கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.