தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மையை கொண்டு இயங்கி வந்தவர் நடிகர் மனோபாலா. இவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
அதன் பின்னரும் இவருக்கு மறுபடியும் ஏற்பட்டதால் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இத்தகைய நிலையில், மனோபாலாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக, மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
சமீபத்தில் என்னுடைய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு அவர் பாராட்டியது என்னுடைய நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.