கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். வரும் 25-ம் தேதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



