2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
கரூர் தொகுதி எனக்கு நன்றாகத்தான் உள்ளது. அதனால், கோவையில் போட்டியிடுவேனா என்ற சந்தேகங்கள் வேண்டாம்.சமூக வலைதளங்களில் பேசுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் கோவை யிலிருந்து 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில், தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளனரா, போலியான வாக்காளர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா என வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். அதன் பின்னரே, ஆட்சேபனைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்படும்.
திமுக-வினரின் கள்ள ஓட்டு தடுக்கப்பட்டதாக பாஜக-வும் அதிமுக-வும் சொல்கின்றன. இப்போது நீ்க்கப்பட்டவர்கள் எல்லாம் எந்த ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டனர்..? பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, இந்த கள்ள ஓட்டுகள் அவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா? அப்போது எல்லாம் இவை நல்ல ஓட்டாக இருந்ததா?ஏற்கெனவே இருக்கும் கட்சியானாலும், புதிதாக வரும் கட்சியானாலும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அவர்களால் அரசியலில் இருக்க முடியாது. திமுக-வை விமர்சித்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்பதால் திமுக-வை விமர்சித்தே ஆக வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கோவையில் ஒருவர் போட்டியிட்டார். வாக்குப் பதிவுக்கு முன்பாகவே, அவர் வெற்றி பெற்றுவிட்டது போல் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தற்போதும் அப்படியான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறீர்கள். அவர் வீட்டில் இருந்துகிளம்பும் போதே லைவ் போடுகிறீர்கள். ஆனால், முதல்வர் யார் என்பதை ஊடகங்கள் முடிவு செய்யமுடியாது. மக்கள் தான் அதை தீர்மானிப்பார்கள் என்றார்.



